Thursday, September 30, 2010

பதிவர்கள் மீது கோபம்

இதை எழுதுவதற்கு என்னை அழைத்த
அன்னுவிற்கு நன்றி.

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
வலைப்பதிவிற்காக நான் வைத்த பெயர் சைவகொத்துப்பரோட்டா

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா?
ஹி...ஹி... இல்லவே இல்லீங்கோ.

இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
நம்ம கடை பக்கம் உங்களை வர வைக்கும் யுத்திதான்!!

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
ஆர்வக்கோளாறுதான்.

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
தமிழ்மணம், இன்ட்லி, தமிழ்வெளி, திரட்டி, உலவு மற்றும் தினமணி
போன்ற திரட்டிகளில் இணைத்தேன்.

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா?
ஆம்.

ஆம் என்றால் ஏன்?
நண்பர் ஸ்டார்ஜன் இந்த தொடர்பதிவுக்கு அழைத்ததால்!

அதன் விளைவு என்ன?
எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது, இதன் "பின்விளை"வாக வந்த பின்னூட்டங்களை படித்தபோது.

இல்லை என்றால் ஏன்?
அதான் "ஆம்"ன்னு சொல்லிட்டோம்ல :))

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
கதை விடலாம்ன்னுதான் (சிறுகதையை சொன்னேன்) எழுத ஆரம்பிச்சேன்.
என்னோட பதிவுகள படிச்சிட்டு நீங்க கொடுக்குற விமர்சனங்கள்
மட்டுமே இப்போதைய சம்பாத்தியம்.

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஒன்னே ஒண்ணுதான்! அதுவும் செம்மொழியான தமிழ் மொழியில்தான்!! (இந்த ஒண்ணுல பதிவு போடவே மண்ட காயுது)

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?.
(அப்பாடி தலைப்புக்கும், பதிவுக்கும் சம்பந்தம் வந்திருச்சு!)
இல்லை.

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி.
பேர் வச்சு கடை தொறந்து நாலு பதிவும் போட்டாச்சு. ஆனா
ஒரு கமெண்ட் கூட இல்லை. ஆனாலும் சளைக்காம அஞ்சாவது
பதிவு போட்டுட்டு, நாப்பது தடவ வலைப்பக்கம் வந்து எட்டிப்பார்த்து ஏமாந்து போன, 40 வது நிமிடம் ஒரு கமெண்ட் இருந்தது.
அந்த நிமிடம், எவரெஸ்ட் மேலே ஏறி நின்னா மாதிரி
ச்சும்மா ஜில்லுன்னு ஒரு பீலிங் வந்திச்சு பாருங்க...(நாம எழுதினதையும் மதிச்சு ஒருத்தர் கமெண்ட் போட்டுட்டாரே!)
அந்த கமெண்டுக்கு சொந்தக்காரர் சதுக்க பூதம் ,
நன்றி நண்பரே.

10.கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
என்னை பத்தி தெரிஞ்சுக்கனுமா இங்கே
போய் பாத்துக்கோங்க.

பாத்தாச்சா! சரி...சரி...மறக்காம உங்க கருத்துக்களை எழுதிட்டு போங்க,
நன்றி.

Monday, September 27, 2010

எக்ஸின் அழைப்பு 3



திரும்பவும் அதே ராஸ்கல்தான், நல்ல வேளை அவன் நம்பரை
X எனபோட்டு வைத்தது. அட்டென்ட் செய்யலாமா வேண்டாமா
என்ற சிறு குழப்பத்திற்கு பின் ஒரு யோசனை வந்தது. சுதா சரியான வாயாடி, அவளிடம் போனை கொடுத்து
X பற்றி கூறி நன்றாக திட்டு என்றேன்.

ஜோதியிடம் போனை வாங்கிய சுதா ஹலோ என்றதும்,

"மச்சான், விஷ்வா பேசறேன்டா" என்றது மறுமுனை.

டேய் பன்னாட இன்னொர்தரம் பேசுன,தேடி வந்து முட்டிய
பேத்துருவேன்.

ஹலோ கொஞ்சம் மரியாதையா பேசுங்க மேடம், யாரு நீங்க.

யோவ், நீ கால் பண்ணிட்டு என்னையே யாருன்னு
கேட்குற. ஏதோ நம்பருக்கு கால் பண்ண வேண்டியது, அது ஒரு பொண்ணா இருந்து, கொஞ்சம் ஏமாந்தவளா இருந்தா மிளகா
அரைக்க வேண்டியது. அந்த தில்லாலங்கடியெல்லாம் இங்க
நடக்காது ராசா என சொல்லி விட்டு, இந்தா ஜோதி என்றபடியே போனை.
ஜோதியிடம் கொடுத்தாள் சுதா.

ஸ்...அடிப்பாவி சுதா, லைனை கட் செய்யாமலே என் பேர
வேற சொல்லிட்டியே.

பயப்படாத ஜோ, இனிமே அவன் கால் பண்ண மாட்டான்.

சொல்லிவிட்டு சுதா நிம்மதியாக உறங்கி விட்டாள். எனக்கு
தூக்கமே வரவில்லை, யாராக இருக்கும் இந்த X. நமக்குதெரிந்த யாராவதுதான் விளையாடி பார்க்கிறார்களோ.
நான் பேசக்கூடிய ஆண்கள் என்று பார்த்தால், உடன் வேலை
பணி புரிபவர்கள் மட்டுமே நினைவுக்கு
வந்தார்கள்.

ஆனால் இந்த லிஸ்டில் உள்ள யாரும் இது போன்ற காரியத்தில்
ஈடுபட மாட்டார்களே. யோசித்து, சலிப்பில்
அப்படியே தூங்கிப்போனேன்.

இரண்டு நாட்கள் ஓடி விட்டது, X இடம் இருந்து கால் எதுவும்
வரவில்லை, ஆனால் மொபைல் ரிங்கும்போதேல்லாம், அவனாய்
இருக்குமோ என்ற நினைப்பு வந்தது.

மூன்றாம் நாள் காலை, மீண்டும் ஒரு புதிய நம்பரில் இருந்து
அழைப்பு வந்தது. அட்டென்ட் செய்யாமலே விடலாமா என
யோசித்தேன். முக்கியமான அழைப்பாய் இருந்தால்...

ஹலோ என்றேன்,

ஹலோ ஜோதி, தயவு செய்து கோபப்படாமல் நான் சொல்றதை
கொஞ்சம் கேளுங்களேன்.

குரலை கேட்டால் X -பேசுவது போல இருந்தது. ஹலோ நீங்க
யார் பேசுறது, என் பேர் உங்களுக்கு எப்படி தெரியும்.

நாந்தாங்க விஷ்வா, உங்களோட பிரண்ட்தான் அன்னைக்கி உங்க
பேர சொன்னாங்களே. நான் உங்ககிட்ட முக்கியமான ஒரு
விசயத்தை பத்தி பேசணும். இன்னைக்கி ஈவினிங் ஆறு மணி
மாயாஜால் வர முடியுமா.

Picture:Thanks to chennaiburrpcom

உங்கள என் பிரண்ட் அன்னைக்கி அப்படி திட்டினாளே,
இன்னும் அறிவு வரலையா சார்.

இல்ல ஜோதி...

என் பொறுமைக்கும் ஒரு எல்லை
உண்டு, மொதல்ல லைன கட் பண்ணுங்க.

ப்ளீஸ் ஜோதி நான் சொல்றத கொஞ்சம் கேளுங்களேன், போன வாரம்
நடந்த சாலை விபத்துல, பாதிக்க பட்ட நபருக்கு யாருமே உதவாதபோது
நீங்க தைரியமா செயல்பட்டு அவரை கொண்டு போய் ஹாஸ்பிட்டல்ல
சேர்த்து விட்டீங்களே அது சம்பந்தமா பேசணும்.

அத நேரடியா முதல் முறை போன் செய்யும்போதே சொல்லி
இருக்கலாமே.

இல்ல...ஜோதி...நான் யாருன்னு தெரிஞ்சா நீங்க பேசுவீங்களோ
மாட்டீங்களோ தெரியல...அதான்..

அதுக்காக இப்படியெல்லாம் டார்ச்சர் பண்ணலாமா சார்,
உங்களோட நோக்கம்தான் என்ன, எதுக்காக நான் உங்கள
பாக்கணும்.

நான் உங்ககிட்ட மன்னிப்பும் நன்றியும் சொல்லணும் ஜோதி, நேர்ல வாங்க எல்லா விவரமும் சொல்றேன்.

சிறிது தயக்கத்திற்குப்பின் சரி வரேன்,ஆனால் நான் உங்களை
பார்த்ததே இல்லையே.

அந்த விபத்து நடந்த இடத்துல நாம சந்திச்சிருக்கோம் ஜோதி
நீங்க வாங்க, நானே உங்களிடம் வந்து பேசுகிறேன்.

சுதாவையும் அழைத்துக்கொண்டு அவன் குறிப்பிட்ட இடத்திற்கு
சென்றேன். சுற்றியிருந்த ஜனத்திரளில் நம்மை அழைத்த X யாராய்
இருக்கும் என நான் யோசித்து கொண்டு இருக்கும்போது,
எங்களை நோக்கி புன்னகையுடன் "அவன்" வந்தான்.

அழைப்பு தொடரும் அழைப்பு 4



Friday, September 24, 2010

எக்ஸின் அழைப்பு 2

அழைப்பு 1

இரவு மணி ஒன்பதரை ஆன பொழுதும் பஸ் ஸ்டாப்பில் கூட்டம்
குறைந்தபாடில்லை. எனக்கான பஸ்சைதவிர மற்றதெல்லாம் வந்தது.
பழுதாகிப்போன என் பைக்கின் அருமை,
இப்போது புரிந்தது.

ஒரு பைக்காரன் வேற்றுகிரகவாசியை பார்ப்பது போல் என்னை பார்த்து க்கொண்டே சென்றான்.
என்ன நினைத்தானோ, சட்டென "யூ"டர்ன் எடுத்து என் அருகில் வந்தான்.

நீ...ங்க அருண்தானே...எப்படி இருக்கே என்றான்.

என் பெயரை சரியாக
சொன்னதோடு சட்டென ஒருமையில் அழைத்தான். நிச்சயம்
எனக்கு தெரிந்தவன்தான். ஆனால், தீவிரமாக யோசித்தும் எனக்கு
அவன் யாரென தெரியவில்லை.

மன்னிக்கணும், நீங்க யாரு...ன்னு...

தெரியலையா, நான்தாண்டா விஷ்வா.
ஆத்தூர் ஸ்கூல், பக்கத்துக்கு பெஞ்ச் நியாபகம் இருக்கா என
புதிர் போட்டான்.

ஆங்...இப்பொழுது எனக்கு நியாபகம் வந்துவிட்டது. எங்கள் குடும்பம்
ஆத்தூரில் ஒரு வருடம் இருந்தபொழுது, இவன் என் பள்ளி
நண்பன். கொஞ்சம் பந்தா பேர்வழி, பெண் பிள்ளைகளை
கண்டால் வழியலுடன் பேசிக்கொண்டே இருப்பான். அப்பொழுது பதினொன்றாம்
வகுப்பில் இருந்தோம், கூட படித்த பெண் ஒருத்தியை
காதல் செய்து கொண்டிருந்தான்.

அவள் வீட்டிற்கு விசயம் தெரிந்து, உடனே அவளுக்கு கல்யாண
ஏற்பாடெல்லாம் செய்ய ஆரம்பித்தார்கள். அவள் அழுது கொண்டே
இவனிடம் வர, இவனோ கூலாக டைம் பாசுக்குதான் உன்கூட
சுத்தினேன் என்றான்.

அதன்பின் அந்தபெண்ணை பள்ளி பக்கமே பார்க்கவில்லை.

அவனோட ஹிஸ்டரி முழுசும், நியாபகம் வந்து விட்டதால், ஓ..விச்சுவா பாத்து எவ்ளோ வருஷம் ஆச்சு. நல்லா இருக்கியா? எனக்கேட்டேன்.

வாயேன் காபி குடிச்சிகிட்டே பேசலாம், அப்படியே வீடு எங்கன்னு
சொல்லு, டிராப் பண்ணிட்டு போறேன் என்றான் விஷ்வா.

மறுக்க முடியாத நிலை, அருகே இருந்த ஹோட்டலில் நுழைந்தோம்.
காபியும், தோசையும் ஆர்டர் செய்துவிட்டு, தன்னுடைய பழைய வீரதீரங்களை அளந்து கொண்டிருந்தான் விச்சு.

தி.நகரில் சொந்தமாக பேன்சி ஷாப்
வைத்திருப்பதாகவும், விருகம்பாக்கத்தில் வாடகை வீட்டில்
தங்குவதாகவும் கூறினான்.


Picture:Thanks indiamike.com

அட!! நான் வடபழனியில் இருக்கேன்ப்பா, இங்க ராஜ் இன்டர்நேஷனல்
ஹோட்டல்ல கேட்டரிங்ல, இருக்கேன் என நான் சொல்லி முடிக்கும்
முன் விஷ்வாவின் மொபைல் ரிங்கியது.
தாழ்வான குரலில் யாரிடமோ பேசி விட்டு லைனை கட்
செய்தான்.

யாரு, உன் மனைவியா விஷ்வா, எனக்கேட்டேன்.

ச்சே...ச்சே...எனக்கும் இன்னும் கல்யாணம் ஆகலைப்பா,
கடையில வேலை பாக்குற பொண்ணு, என்றான்.

உனக்கு கல்யாணம் ஆயிருச்சா என என்னை கேட்டான்,

இன்னும் இல்லை என்றேன்.
சரி விச்சு, அம்மா காத்துகிட்டு இருப்பாங்க வாயேன் வீட்டுக்கு என
விச்சுவை அழைத்து விட்டு பில்லை கையில் எடுத்தேன்.

விச்சு வெடுக்கென பில்லை வாங்கி கொண்டு, நான்தான் பணம் கொடுப்பேன் என பிடிவாதம் பிடித்தவன் தன்
பைகளை துலாவியவன்
சற்றே கலவர முகத்துடன் என்னை பார்த்தான்.

என்ன ஆச்சு விஷ்வா என்றேன்.

பர்சை காணோம் அருண், எங்கேயோ தவற விட்டுட்டேன் என்றான்.

அடப்பாவமே, நிறய பணம் வச்சிருந்தயா...

கிட்டத்தட்ட் 500 ரூபாய் வச்சிருந்தேன், எங்கேயோ தவறி போச்சேஅருண், என்றான் பறிகொடுத்த கவலையுடன்.

இந்தா அவசரத்துக்கு வச்சுக்கோ என்று அவன் பையில் நூறு
ரூபாய் தாள் ஒன்றை திணித்துவிட்டு,
அவனிடமிருந்து பில்லை வாங்கி பணத்தை கொடுத்துவிட்டு திரும்பினால்
விஷ்வாவை காணவில்லை.

ஹோட்டலை விட்டு வெளி வந்து அவன் பைக் நிறுத்திய
திசையில் பார்த்தேன். பைக்கருகில் நின்று
கொண்டு, "மச்சான், விஷ்வா பேசறேன்டா"
என யாரிடமோ போனில் பேசி கொண்டிருந்தான்.

அழைப்பு தொடரும் அழைப்பு 3

Wednesday, September 22, 2010

எக்ஸின் அழைப்பு 1

இந்த ஒரு மணி நேர பேருந்துப்பயணம் எனக்கு ரொம்ப பிடிக்கும், கிண்டலாய் பேசிக்கொள்ளும் கல்லூரி இளசுகள், பவ்யமான பள்ளி சிறுசுகள்,
ஒரு இன்ச் பவுடர் கோட்டிங்கில் நீரோடை போல வியர்வையுடன் பயணிக்கும் ஆண்ட்டிகள் என
மனிதர்களை பார்த்து கொண்டே இருந்தால் நேரம் போவதே தெரியாது.

உன் போன்லதான் ரிங் அடிக்குதும்மா, என் பக்கத்தில் இருந்த ஆண்டி சொன்னபின்தான்
சுய நினைவு வந்தவளாய் ஹான்ட் பேக்கை திறந்து யார் அழைப்பது எனப்பார்த்தேன்.
புதிரான புதிய நம்பர்(+85 ****), யாராக இருக்கும் என யோசித்தவாறே ஹலோ என்றேன்.

டேய் பாபு, நான் விஷ்வா பேசறேன்டா நல்லா இருக்கியா மச்சான் என எதிர்முனையில் எவனோ
பேசினான்.

ஹலோ நான் பாபு இல்லீங்க, ராங் நம்பர் என்றேன்.

ஓ....சாரி...மேம்..என்று அவன் சொல்ல தொடர்பை துண்டித்தேன்.

மதியம் இரண்டு மணி அளவில், தூக்கம் கண்ணை செருக மிகவும் சிரமப்பட்டு லெட்ஜரை
முறைத்து கொண்டிருந்தேன். போன் அழைத்தது, தூக்க கலக்கத்தில்
ஹலோ என்றேன்.

மச்சான், என்னடா ஆச்சு, காலையில் இருந்து உன் நம்பருக்கு
ட்ரை பண்றேன், எவளோ ஒருத்தி பேசுறா...

ஹலோ, இப்பவும் அந்த "எவளோ ஒருத்திகிட்டதான்" பேசிகிட்டு இருக்கீங்க.

சா...ரி... மேம்...

ஹலோ சார் நீங்க எந்த நம்பருக்கு ட்ரை பண்றீங்க,

சொன்னான், ஒரு நம்பர் வித்தியாசம்!! என் நம்பர் 6-ல முடியுது சார், நீங்க கூப்பிட வேண்டிய நம்பர் 9 பின்ன எப்படி "கரெக்டா" நம்பர் மாத்தி கூப்பிடுறீங்க.

அதான் மேம், எனக்கு புரியல...

ஹலோ நக்கலா... இன்னோர்தடவை கால் பண்ணீங்கன்னாமரியாதை கெட்டிரும் என
சொல்லிவிட்டு லைனை கட் செய்தேன். அவன் நம்பரை "எக்ஸ்" எனப்போட்டு வைத்தேன்.

Picture:Thanks tradebitcom

சில்லென காற்று வீசும் இரவு, தூக்கம் வராமல் ஹாஸ்டல் மொட்டை
மாடியில் உலாத்தி கொண்டிருந்தேன். என் ரூம்மெட் சுதா
மூச்சிரைக்க ஓடி வந்தாள்.

ஜோதி உனக்கு போன் என்றவாறே சார்ஜரில் போட்டிருந்த என் மொபைலை
கொண்டு வந்தாள்.

யார் இந்த நேரத்தில் என யோசனை செய்தவாறே டிஸ்ப்ளே
பார்த்தேன் "எக்ஸ் காலிங்" என காட்டியது.

அழைப்பு தொடரும்

அழைப்பு 2

Friday, September 17, 2010

ஸ்வேதா என்றொரு...

ச்சே...என்ன வாழ்க்கை இது, எந்திரம் மாதிரி காலையில் பாதி தூக்கத்திலே எல்லாக்கடனையும் முடிச்சி ஆபிஸ் போனா அந்த கடன்காரன்கிட்ட (மேனேஜர்) நாள் முழுக்க மல்லுகட்ட வேண்டி இருக்கு.

சரி இன்னைக்காவது, கடல்ல மூழ்கும் முன்னே ஆதவன பார்க்கலாம்னா
"அது" வழக்கம்போல நாலு ஆள் வேலையை என் தலை மேல வச்சிருச்சி.

கரும்பு ஜூஸ் பிழியுற மெசின் துப்புன சக்கை கெணக்கா, ரயிலுக்காக பார்க் ஸ்டேசன்ல உக்கந்திருக்கும்போதுதான், அந்த அழகு பதுமையை பார்த்தேன்.

என்னையும் அவளையும் தவிர, ஜோடிகள் ஒன்றும், குடும்பம் ஒன்றும் மட்டுமே இருந்தது.

பிளாட்போர்மில் தொங்கிய டிஜிட்டல் கடிகாரம் 22 .30 என ஒளிர்ந்தது.

பதுமையை நோட்டமிட்டேன், கையில் இருந்த புத்தகத்தில் மூழ்கி இருந்தது.

பாம்...என்ற ஓசை கேட்டு கலைந்த அனைவரும் ஒரே பெட்டியில் ஏறினோம்.

சேத்துப்பட்டு ஸ்டேசனில் நானும், பதுமையும் மட்டுமே.

இப்பொழுது S .M .S இல் மூழ்கி இருந்தது பதுமை.
ஆஹா...இன்னைக்கி, அதிர்ஷ்ட தேவதையின் ஆசிர்வாதம் முழுக்க ஒனக்குதான், என்ஜோய்டா விக்கின்னு எனக்குள்ளே மைன்ட் வாய்ஸ்!!

ஹாய்...ஐயம் ஸ்வேதா...நீங்க என்றபடியே பதுமை கை நீட்ட...

விக்கின்னு...சொல்றதுக்குள்ள எனக்கு பல தடவை விக்கல்.

சொதப்பாதடா விக்கி...இது வர நீ பாத்த எந்த பொண்ணுகிட்டையும் பேசுற தைரியம் ஒனக்கு வந்தே இல்லை, ஒன்கிட்ட முதன்முறையா ஒரு பொண்ணு பேசுது, இவள உன் வாழ்க்கை துணையா ஆக்கிகோடா...

ச்சே...ஒரு பொண்ணு நாலு வார்த்தை பேசினா உடனே இப்படியெல்லாமா யோசிக்கிறது.

ரெண்டுமே என்னோட மைன்ட் வாய்ஸ்தான்.

அவளுடன் பேசப்பேச சுய சரிதம் அத்துணையும் ஒப்பித்தேன், அவளும். அதன்பின் என் தாய், தங்கை, மேனேஜர் எல்லாம் நினைவடுக்களில் கொஞ்சம், கொஞ்சமாய் அழிந்து போய் முழுவதும் ஸ்வேதாவே இருந்தாள்.

"அன்பில் அவன் சேர்த்த இதை மனிதரே வெறுக்காதீர்கள்"
என் மொபைல் ரிங்கியது...பூஜை வேலையில் யார் அந்த கரடி...
சேகர் காலிங் என்றது ஸ்க்ரீன் டிஸ்ப்ளே...
அட்டென்ட் செய்து ஹலோ...ஹலோ...என்றவாறே டிஸ்கனெக்ட் செய்த
கையோடு சுவிட்ச் ஆப் செய்தேன்.

நானும், ஸ்வேதாவும், எங்கள் "செல்லங்களுடன்" மால்களில் உல்லாசமாக சுற்ற
ஆரம்பிக்கும் தருணத்தில் கிண்டி ஸ்டேசன் வந்து விட்டது.

நான்கு தடியர்கள் எங்கள் கம்பார்ட்மெண்டில் ஏறினார்கள். சிறய குலுக்கலுடன் ட்ரெயின் கிளம்ப, எனக்குள் சிறிது பய அமிலம் சுரக்க
ஆரம்பித்தது.

இவனுக பார்வையே சரி இல்லையே...நம்ம "ஆள" இவங்க எதுவும்
தொல்லை பண்ணகூடாது.

நாலில் ஒன்று, ஸ்வேதாவின் பக்கத்தில் அமர, மீதி மூன்றும் என்னருகே.

ஸ்வேதாவின் தோளில் கை போட்டது அந்த வில்லன், எனக்கு
ரத்தமெல்லாம் சூடேறியது.

ஆனால் ஸ்வேதா, சிறிதும் பயப்படவில்லை.

என்ன, காயத்ரி நீ S .M .S ல சொன்ன "பட்சி" இதுதானா, எவ்வளவு
தேறும்...

பார்ட்டிக்கு 15 ,0000 ரூபாயாம் மாச
சம்பளம், இன்னைக்கி சம்பள தேதியில...புல் அமௌன்ட்
வச்சிருக்கு பரமு...இப்போதான் என்கிட்டே அவ்ளோத்தையும்
சொல்லிச்சு, என ஸ்வேதா....என்ற....அந்த மூதேவி காயத்ரி தடியனிடம்
அழகாய் போட்டு கொடுக்க...
*****************************





படம்:நன்றி கூகுள்

Thursday, September 9, 2010

பூமிக்கு எதிரி

முன்பெல்லாம் கடைகளுக்கு செல்லும்பொழுது, கூடை அல்லது
(துணி) பை எடுத்து செல்வோம். இப்பொழுது மிக அரிதாகி விட்டது
இந்த செயல்.

இவைகளை எடுத்து செல்வதே "நாகரீகம் அற்ற" செயலாகி விட்டது.
கடைகளில் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து கொடுத்து
விடுகிறார்கள்.

பொருட்கள் வீடு சேர்ந்தவுடன், பைகள் ரோட்டுக்கு சென்று
விடுகிறது. இவற்றை பசித்த மாடுகள்
சாப்பிட அவைகளின் "பின் விளைவுகள்" மிக மோசமாய் இருக்கும்.

சாலை ஓரங்களில் "கலர் பலூன்களாய்" பிளாஸ்டிக் பைகளை
பார்க்கலாம். இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு இது
மிக பெரிய ஆபத்தை விளைவிக்க வாய்ப்புகள் அதிகம்.
(வேகமாக செல்லும்பொழுது, இவைகள் நம் கண்ணை மறைத்தால்...)

கடல் வரையிலும் இந்த (குப்)பைகள் செல்வதால், ஆமைகள்,
டால்பின்கள், பென்குயின்கள் போன்றவை இந்த பைகளை
உணவென நினைத்து உண்பதால் இறக்க நேரிடுகின்றன.

பங்களாதேஷில் வெள்ளம் வர இதுவும் ஒரு காரணியாம்.
தெருக்களில் வீசப்படும் பைகள், கழிவு நீர் குழாய்களை அடைத்து
கொள்வதால் மழை காலங்களில் தண்ணீர் வெளியேற வழி
இல்லாது போய் விடுகிறது. எனவே அந்த நாட்டில் இந்த
பைகளின் பயன்பாட்டை தடை செய்து விட்டார்கள்.

பெட்ரோல் விலையை நினைத்தாலே நம் அடி வயிறு பற்றி
எறிய ஆரம்பித்து விடும் காலம் இது.

பிளாஸ்டிக் பைகள், பெட்ரோலிய பொருட்கள் மூலமே தயாரிக்க
படுகிறது!! பெட்ரோல் விலை குறைய வேண்டும் என்று
நினைத்தால், பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டையும்
குறைத்து விடுங்கள்.

இவைகளை எரித்தால் Toxic கலந்த புகை உண்டாவதனால்
காற்று மாசு படுகிறது.
இது மண்ணோடு மண்ணாக மக்கி போவதற்கு ஆயிரம்
வருடங்கள் ஆகுமாம்!!

எனவே இதனை தவிர்த்தல் நலம்.

இது ஒரு சிறிய நினைவூட்டல் மட்டுமே.

Friday, September 3, 2010

வர்ணம்

பள்ளி முடிய இன்னும் 15 நிமிடம் இருந்தது, நிமிடங்களை விழுங்கும் பொருட்டு மனித முகங்களை படிக்க
ஆரம்பித்தேன். அநேகம் பேரிடம் ஆயாசமும், கவலைகளுமே தெரிய
இதிலிருந்து சற்றே மாறுபட்டு இருந்தால் "அவள்." கிட்டத்தட்ட என்
வயதையொட்டி இருந்தாள்.

ஒரு சிநேகப்புன்னகையை உதிர்த்தேன், அவளும்.

சம்பாத்தியம் இல்லையென்றால், நம் வீட்டு நபர்களே நம்மை
"அந்நியன்" ஆக்கி விடுகிறார்கள். மனதை ரணமாக்கும் பேச்சுக்கள்
வேறு, இவற்றில் இருந்து தற்காலிக விடுதலை அவளின் மூலம்
கிடைத்தாற்போல இருந்தது.

அடுத்து வந்த நாட்களில் அவளை பார்ப்பதற்காகவே முன் கூட்டியே
சென்று காத்திருக்க ஆரம்பித்தேன்.

வெறும் பார்வைகளும், புன்னகையுமாய் நாட்கள் கழிந்து
கொண்டிருந்தது.

இன்று மதியம் 2 மணிக்கு ஆரம்பித்த அடை மழை 3 மணிக்குத்தான் விட்டது.
பள்ளிக்கு 1 கிலோ மீட்டருக்கு முன்பாகவே மிகப்பெரிய கூட்டம்.
அருகே சென்ற பின் தெரிந்தது, வயதான புளிய மரம் ஒன்று நெடுஞ்சான் கிடையாக சாலையின் குறுக்கே உயிரை விட்டிருந்தது.

"போஸ்ட்மார்ட்டம்" செய்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகும் என
நகராட்சி ஆட்கள் மூலம் செய்தி கசிய, அருகில் இருந்த டீக்கடை பாய்லர் அதிகமாக சூடு வாங்கியது.

குளிருக்கு இதமாக, டீயை வார்க்கும்போது "அவள்" வந்தாள்,
என்னங்க இப்படி ஆகிருச்சு என்றாள்.

வேற வழி இல்லீங்க, ஒரு மணி நேரம் காத்துதான் இருக்கணும்
என்ற பின், அவளுக்கும் ஒரு டீ சொல்லிவிட்டு நிறய பேச
ஆரம்பித்தோம்.

எங்களுக்குள் நல்லதொரு நட்பை ஏற்படுத்தி இருந்தது கடந்த
ஒரு மணி நேரம்.

பிரியும் பொழுதில் அந்த மரத்திற்கு மானசீகமாய் நன்றி சொல்லி
கொண்டேன்.

அதன்பின் ஒரே மாதத்தில் என் சந்தோஷ தருணங்கள் கலைந்து விட்டன.
அவளை பார்த்து இரண்டு வாரம் ஆயிற்று, எந்த
தகவலும் இல்லை. ஏனோ என் மனதில் இனம் புரியா வலி.

இரு வாரங்கள் ஆகி விட்டது, என் நிம்மதி இழந்து. பெற்றவள் என்று
கூட நினையாமல் கடுஞ்சொற்களை பேசி விட்டான், என் மகன்.
இப்போதெல்லாம், ஆட்டோவில்தான் செல்கிறாள் என் பேத்தி நான்கு தெரு தள்ளி இருக்கும் பள்ளிக்கு.

நரைகளின் நட்பிற்கும் வர்ணம் பூசப்பட்டது.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)